Tuesday, August 12, 2014

குருசும் குருதியும்...



(ஈராக் கிறிஸ்தவர்கள் கொன்றழித்து சூறையாடப்படுகிறார்கள் - செய்தி)



குருசு சுமந்தவரைத்
தலையாய்க் கொண்டு
குருதியில் குளிக்கும்
சமாதான புறாக்கள்
இவர்கள்!

தூயபேதுரு பாறையில்
விசுவாசம் பயின்று
ஓசான்னா பாடிய
குயில்கள்
ஓலமிடுகின்றன
இந்நிமிடத்திலும்!

ஆயுதம்தாங்கியவர்களின்
“மதம் மாறு,
உன் ஈன உயிர்காத்திடு”
மிரட்டலுக்கு அஞ்சாது
தங்களை
சிதைக்க சித்தங்கொண்ட
சிலுவைப் போராளிகள்!

சிந்தி சிதறும் மாசற்றவர்
இரத்தம்
தீவிரநோய்கொண்ட
கருங்காடையர்களின்
ஆன்மாக்களைக்
கழுவட்டும்!

திறந்திருக்கும்
துயர் காயங்கள்
நடுங்கும் நிர்வாணங்கள்
உறையும் மௌனங்கள்
உயிர்த்தவருக்கு சாட்சியாய்
'சவுல்'கள்
'பவுல்'களாகிட
பிரார்த்திக்கட்டும்!


No comments: